சுந்தரரின் திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையைக் கூறுகிறது. இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார்நம்பியால் எழுதப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்துமூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம். இதன் பெருமை காரணமாக இது பெரியபுராணம் என்று அழைக்கப்படுகிறது.
கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார், சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார். 'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று இவரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.
9th tamil text book - Periyapuranam
திருநாட்டுச் சிறப்பு
1. மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால் (பா.எ.59)
2. மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார் (பா.எ.63)
3. காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம் (பா.எ.67)
சொல்லும் பொருளும்:
மா - வண்டு
மது - தேன்
வாவி-பொய்கை
வளர் முதல் - நெற்பயிர்
தரளம் - முத்து
பணிலம் - சங்கு
வரம்பு - வரப்பு
கழை - கரும்பு
கா - சோலை
குழை - சிறு கிளை
அரும்பு - மலர் மொட்டு
மாடு - பக்கம்
நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள்
கோடு - குளக்கரை
0 கருத்துகள்