பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
பொருள் : பொன்னும் பவளமும் முத்தும் பெருமலையில் பிறக்கும் மாணிக்கமும், தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவில் இருப்பினும், மாலையாகக் கோத்து அருமையான அணிகலன் அமைக்கும்போது, தம்முள் ஒருங்கே சேர்வதுபோல, என்றும் சான்றோர் சான்றோர் பக்கமே இருப்பர்; சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேர்வர்.
சொற்பொருள்:
சொற்பொருள்:
- துகிர் – பவளம்
- மன்னிய – நிலைபெற்ற
- செய – தொலைவு
- தொடை – மாலை
- கலம் – அணி
இலக்கணக்குறிப்பு:
- பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மை
- மாமாலை – உரிச்சொற்றொடர்
- அருவிலை – பண்புத்தொகை
- நன்கலம் – பண்புத்தொகை
புணர்ந்து , புணர் + த் (ந்) + த் + உ. புணர் - பகுதி த் - சந்தி , த் - ந் ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, உ - வினையெச்சவிகுதி
பிரித்தறிதல்:
அருவிலை = அருமை + விலை
நன்கலம் = நன்மை + கலம்
ஆசிரியர் குறிப்பு:
- இப்பாடலாசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்.
- கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொது, பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
- அப்போது அவருடன் இருந்தவர் கண்ணகனார்.
- அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்திய கண்ணகனார் இப்பாடலைப் பாடினார்.
நூல் குறிப்பு:
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
- இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
- இந்நூல் சங்ககால மக்களின் வாழ்க்கைநிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது.
- தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவுகிறது.
0 கருத்துகள்