யூபிஎஸ்சி தேர்வில் வெற்றிப்பெற்றுள்ள அரசு பேருந்து நடத்துநர்

கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் மது. 29 வயதாகும் இவர், தனது பணி நேரம் போக தினமும் 5 மணி நேரம் போட்டித்தேர்வுக்காக படித்து வந்துள்ளார்.


ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த மது, கடந்த 2019 ஜூன் மாதம் முதல்நிலை தேர்வில் வெற்றிப்பெற்றார். இந்நிலையில் முதன்மை தேர்விலும் மது வெற்றிப்பெற்றுள்ளார். வரும் மார்ச் மாதம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதில் தேர்ச்சிப் பெற்றால், நடத்துநர் பணியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக மாறிவிடுவார்.

மது தனது குடும்பத்தில் முதல்முறையாக பள்ளிக்கு சென்ற நபராவார். 19 வயதில் நடத்துநர் பணியில் சேர்ந்த மது, இளநிலை, முதுநிலை படிப்புகளை தொலைத்தூர கல்வி மூலம் பயின்றுள்ளார். முதுநிலையில் அரசியல் அறிவியல் படித்திருக்கிறார்.

இதற்கு முன் 2018 ல் தேர்வெழுதிய மது தோல்வி அடைந்தார். இரண்டாவது முயற்சியாக தற்போது முதன்மை தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளார்.

இவர் எந்த கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்லாமலே தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூப் வீடியோக்கள் மூலம் நிறைய கற்றுக்கொண்டதாக மது தெரிவிக்கிறார்.

பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஷிகா ஐஏஎஸ், மதுவுக்கு ஊக்கம் அளித்துள்ளார். ஐஏஎஸ் நேர்காணலுக்கு தயாராவதற்கு வழிகாட்டலையும் ஷிகா வழங்கி வருவதாக பெங்களுரு மிர்ரர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்