இரட்டுற மொழிதல்

10th Tamil Text Book

இரட்டுற மொழிதல்

-சந்தக்கவிமணி தமிழழகனார்

இரட்டுற மொழிதல்

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆழிக்கு இணை

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால்‍‍‍ - நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு

- தனிப்பாடல் திரட்டு

சொல்லும் பொருளும்

துய்ப்பது - கற்பது, தருதல்
மேவலால் - பொருந்துதலால், பெறுதலால்

பாடலின் பொருள்

தமிழ்: தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது; சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

கடல்: முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது; வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது. தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

நூல் வெளி

புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார்.

சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். 

இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்