திருக்குறள் - கேள்வி

TNPSC பாடத்திட்டம் – பொதுத்தமிழ்
பகுதி-ஆ   இலக்கியம்
கேள்வி  (சான்றோர் உரைகளைக் கேட்டல்)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
விளக்கம்: செல்வங்களுள் சிறப்பான செல்வம் கேள்விச் செல்வமாகும். அதுவே எல்லா செல்வத்தை விடவும் சிறந்த செல்வமாகும்.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
விளக்கம்: வயிற்று பசியை போக்க உணவு தேவை. அதுபோல அறிவு என்னும் பசியை போக்க கேள்வி என்னும் உணவு தேவை. 

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
விளக்கம்: செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால், அவரை தேவர்களோடு ஒப்புவித்து மதிப்பர்.

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு)
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
விளக்கம்: நூல்களை கற்கவில்லை என்றாலும் கற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அது நம் வாழ்வில் தளர்ச்சி வரும் போது சிறந்த துணையாக இருக்கும்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
விளக்கம்: ஒழுக்கம் உடையவர்களின் சொற்கள் வழுக்கல் உடைய நிலத்தில் நடப்போர்க்கு ஊன்றுகோல் போல உதவி புரியும்.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
விளக்கம்: நல்லோர் சொல்லும் செய்தி சிறிதளவாக இருந்தாலும், அது அளவுக்கு மீறிய பெருமையைத் தரும்.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்(து)
ஈண்டிய கேள்வி யவர்.
விளக்கம்: கேள்வி அறிவு உள்ளவர்கள் ஒன்றை தவறாக உணர்ந்தாலும் அறநெறிக்கு மாறாக பேச மாட்டார்கள்.

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
விளக்கம்: கேள்வியால் துளையிடப்படாத காது கேட்கும் விருப்பம் இல்லையென்றால் செவிட்டுத் தன்மைக் கொண்ட காதாகக் கருதப்படும்.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
விளக்கம்: நுட்பமான கருத்துக்களைக் கேட்டு அறியாதவர் நல்ல சொற்களைப் பேசுதல் அரிது.

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
விளக்கம்: செவியால் உணரகூடிய சுவையை உணராது,வாய் சுவையை மட்டும் கொண்டவர்களை மக்கள் என்று கருதமாட்டார்கள், மாக்கள் என்றே கருதுவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்