தமிழ் இலக்கணம் - வல்லினம் மிகா இடங்கள்

1. அது, இது என்னும் சுட்டுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

2. எது, யாது என்னும் வினாச் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

3. அவை, இவை, எவை, அத்தனை, இத்தனை, எத்தனை என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

4. அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

5. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.
6. அன்று, இன்று, என்றூ என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.

7. மென்றொடர்க் குற்றியலுகரத்தில் வல்லினம் மிகாது.

8. எண்ணுப் பெயர்களான, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

9. ஒவ்வொரு என்பதன் பின் வல்லினம் மிகாது.
10. முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள்.)

11. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: நீர் குடித்தான்)

12. மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கை தட்டினான்)

13. மூன்றாம் வேற்றுமை விரியிலும் வல்லினம் மிகாது. (உதாரணம்: தந்தையோடு சென்றான்.)

14. சிறு, சிறிய, பெரிய என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

15. நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வல்லினம் மிகாது. (உதாரணம்: தங்கை பெண், கண்ணகி கேள்வன்)
16. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையிலும் உயர்திணையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தக்கோர் சால்பு)
17. ஐந்தாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

18. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையானால் வல்லினம் மிகாது. (உதாரணம்: காளி கோயில்)

19. ஆறாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கண்ணனது கை)

20. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தரை படுத்தான்.)

21. எட்டாம் வேற்றுமை என்னும் விளி வேற்றுமையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தலைவா கொடும், நாடே தாழாதே.)

22. வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: தாழ்குழல், காய்கதிர்)

23. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது. (உதாரணம்: கபிலபரணர், செடிகொடி, வெற்றிலை பாக்கு)

24. வினைமுற்றுத் தொடர்களில் வல்லினம் மிகாது. (உதாரணம்: ஓடின குதிரைகள், போயின பசுக்கள்)
24. படி என்னும் இறுதியுடைய சொல் வினையுடன் சேர்ந்து வரும்போது வல்லினம் மிகாது. (உதாரணம்: வரும்படி சொல், போகும்படி சொல்லாதே.)

25. பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: வந்த கன்று, சென்ற தாய், ஓடிய சிறுவன்)

26. உகர ஈற்று வினையெச்சத்தின்பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: சென்று கண்டான், தின்று கொழுத்தான்)
27. ஆ என்னும் எழுத்தை இறுதியில் கொண்டுள்ள வினாச்சொல்லுக்குப் பின் வல்லினம் மிகாது. (உதாரணம்: அவனா சொன்னான், அப்படியா சொன்னான்)

28. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது.

29. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது.

30. நனி, கடி, மா என்னும் உரிச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

31. ஒரு, இரு, அறு, எழு என்னும் விகார எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்