அணி இலக்கணம் பொதுத்தமிழ் TNPSC TET Exams

அணி என்றால் என்ன?

அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்.  இயல்பான அழகை ஆடை, அணிகலன்களால் மேலும் அழகுபடுத்திக் கொள்வதுபோல, ஒரு பாடலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலே அணி எனப்படும்.

செய்யுளில் அமையும் அணி கற்பவருக்கு இன்பம் பயக்கும். அதில் சொல்லப் புகுந்த கருத்தும் தெளிவாகப் புலப்படும்.

1 . தற்குறிப்பேற்ற அணி :

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின்மீது, கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

தற்குறிப்பேற்ற அணி – (தன் + குறிப்பு + ஏற்றம் + அணி)

தையல் துயர்க்குத் தரியாது தம்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய், – வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம்.

விடியற்காலையில் கோழிகள் கூவுதல் இயல்பான நிகழ்ச்சி. ஆனால் கவிஞர், காட்டில் நள்ளிரவில் கணவனைப் பிரிந்து வருத்தமுற்ற தமயந்த்தியின்; துயரைப் போக்க, இருளை நீக்குவதற்குத் தேரேறி விரைந்து வருமாறு ஞாயிற்றைக் கோழிக் கூட்டங்கள் கூவி அழைப்பதாகத் தன் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளார். எனவே, இது தற்குறிப்பேற்ற அணி.

2 . வஞ்சப்புகழ்ச்சி அணி :

புகழ்வதுப்போலப் பழிப்பதும், பழிப்பதுபோலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணி எனப்படும்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

இப்பாடலில், தீயவர்களைத் தேவர்களுக்கு இணையாகப் புகழ்ந்து கூறுவதுபோலக் கூறித், தீயவர்கள் தம் மனம்போன போக்கில் தீய செயல்களைக் செய்து அழிவார்கள் எனப் பழித்துக் கூறப்பட்டுள்ளது.

கல்லால் அடித்ததற்கோ காலால் உதைத்ததற்கோ
வில்லால் அடித்ததற்கோ வெட்கினீர் – சொல்வீரால்
மஞ்சுதனைச் சூழும் மதிலானைக் காவாரே
நஞ்சுதனைத் தின்றதென் முன்.

இப்பாடலில், திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டாக்கிய நஞ்சினைச் சிவபெருமான் உண்டு தேவர்களைக் காத்தார் என்பது புராணக் கதை.

இதனைக் காளமேகப் புலவர் சிறிது மாற்றி, ஒருவன் கல்லால் அடித்ததற்காகவும், இன்னொருவன் காலால் உதைத்ததற்காகவும், வேறொருவன் வில்லால் அடித்ததற்காகவும் வெட்கமடைந்து உயிர்வாழ விரும்பாமல் நஞ்சை உண்டார் எனப் பழிப்பதுபோல் சிவபெருமானைப் புகழ்ந்துள்ளார்.

எனவே, இது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆயிற்று.

3 . இரட்டுறமொழிதல் அணி :

ஒருசொல் இருபொருள்பட அமைந்து வருதல் இரட்டுறமொழிதல் எனப்படும். இதனைச் சிலேடை எனவும் வழங்குவர். இது செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என இருவகைப்படும்.

அ) செம்மொழிச்சிலேடை :

ஒரு செய்யுளில் ஒரு சொல் பிரிவுபடாமல் நின்று, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தருவது செம்மொழிச் சிலேடை எனப்படும்.

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித்  திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரில்பிண்
ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெளளெனவே ஓது.

இப்பாடலில் பாம்பு, எள் ஆகிய இரண்டிற்கும் சிலேடை

கூறப்பட்டுள்ளது. ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும் எனும் முதலடி, படமெடுத்து ஆடியபின் குடத்துள் சென்றடையும், படமெடுத்தாடும்போது, இரைச்சலிடும் எனப் பாம்பிற்கும், செக்காடியபின் எடுத்த எண்ணெயைக் குடத்தில் ஊற்றுவர். செக்காட்டும்போது இரைச்சல் உண்டாகும் என எள்ளிற்கும் சிலேடையாக வந்துள்ளது.

இப்பாடலில் சொற்கள் பிரிவில்லாமல் இருபொருள்கள் தந்தன.

எனவே, இது செம்மொழிச்சிலேடை ஆயிற்று.

ஆ) பிரிமொழிச்சிலேடை :

ஒருசொல் தனித்து நின்று ஒருபொருளையும், அதுவே பிரித்து நின்று வேறொரு பொருளையும் தருமாறு அமைத்துப் பாடுவது, பிரிமொழிச்சிலேடை ஆகும்.

(எ.கா.) :
செய்யுள் கிடைமறிக்கும் சேர்பலகை யிட்டுமுட்டும்
ஐயமற மேற்றா ளடர்க்குமே – துய்யநிலை
தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில்
ஆடும் கதவுநிக ராம்.

பொருள் :

செய் – வயல், வீடு. பலகை – பல வகைகள், பலகை.

தாள் – முயற்சி, தாழ்ப்பாள். துய்ய – தங்க, அழகான.

இப்பாடலில், ஆடும்கதவும் ஒன்றற்கொன்று சமம். எங்ஙனமெனில், 

1 . ஆடு : 

செய்யுள் கிடைமறிக்கும் – வயலில் கிடையாக மறிக்கப்படும். 

சேர் பல கை யிட்டுமுட்டும் – பொருந்திய பல கைகளைக் கொம்பினால் முட்டும்.

ஐயமற மேல் தாள் அடர்க்கும் – ஐயமின்றி முயற்சியோடு போராடும்.

துய்ய நிலை தேடும் – தங்குதற்குத் தூய்மையான இடம் தேடும்.

2 . கதவு செய் உட்கிடை மறிக்கும் – வீட்டின் உள்ளிடத்தைத் தடுத்து மூடி இருக்கும்.

சேர் பலகை இட்டுமுட்டும் – பலகைகளைக் கொண்டு செய்யப்பட்டிருக்கும்.

ஐயமற மேற்றாள் அடர்க்கும் – திண்ணமாக மூடப்படுவதோடன்றித் தாழ்ப்பாளிட்டும் இருக்கும்.

துய்யநிலை தேடும் – அழகானவேலைப்பாடு (நனைல) உடையதாய் இருக்கும்.

எனவே, இது பிரிமொழிச் சிலேடை.

4 . பின்வருநிலையணி

செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ, சொல்லும்

பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்க்கும். அவை,

சொல்பின்வருநிலையணி, பொருள்பின்வருநிலையணி, சொற்பொருள் பின்வருநிலையணி என மூவகைப்படும்.

அ) சொல்பின்வருநிலையணி

செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது, சொல்பின்வருநிலையணி.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

இக்குறள்பாவில் துப்பு என்னும் ஒரேசொல் உண்பவர், உணவு, உண்ணும் பொருள் எனப் பல்வேறு பொருள்களில் வந்துள்ளது. எனவே, இது சொல்பின்வருநிலையணி.

ஆ) பொருள் பின்வருநிலையணி

செய்யுளில் ஒரே பொருள்தரும் பல சொற்கள் வருவது, பொருள் பின்வருநிலையணி.

“அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன – காயா,
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிந்ததிதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை.”

இப்பாடலில் மலர்தல் என்னும் ஒரு பொருளில் அவிழ்தல் அலாதல், நெகிழ்தல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் வந்துள்ளன. எனவே, இது பொருள் பின்வருநிலையணி.

இ) சொற்பொருள் பின்வருநிலையணி :

செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது, சொற்பொருள் பின்வருநிலையணி.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்.

இப்பாடலில் தீய என்னும் சொல் தீமை என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி.

5 . பிறிதுமொழிதலணி :

உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது பிறிதுமொழிதல் அணி ஆகும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

மென்மையான மயில்தோகையே ஆயினும், அதனை அளவுக்கு விஞ்சி வண்டியிலேற்றின் அச்சு ஒடிந்துவிடும் என்பது உவமை.

பகைவர்கள் தனித்தனியே நோக்கும்போது மிக எளியோராயினும் ஒன்றுகூடின், தனிப்பட்ட பகை மன்னன் எவ்வளவு வலிமை உடையவனாயினும் அவனை எளிதில் வென்றுவிடுவர் என்பது, இதனால் பெறப்படும் பொருள். எனவே, இது பிறிதுமொழிதலணி

உருவக அணி விளக்கம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்