திருவள்ளுவ மாலை


தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.
- கபிலர்

பொருள் :
உலக்கைப் பாட்டின் இன்னிசை கேட்டுக் கண்ணுறங்கும் கோழிகளை உடைய வளநாட்டு மன்னனே! சிறுபுல்லின் தலையில் உள்ள தினையளவினும் சிறுபனிநீர், நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தைத் தன்னுள் தெளிவாகக் காட்டும். அதுபோல, வள்ளுவரின் குறள்வெண்பாக்கள் அரிய பொருள்களைத் தம்மகத்தே அடக்கி மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

சொற்பொருள் : 

வள்ளை - நெல் குத்தும்போது பெண்களால் பாடப்படும் உலக்கைப் பாட்டு; அளகு - கோழி.

ஆசிரியர் குறிப்பு :

பெயர் : கபிலர்.

காலம் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும், சங்க காலத்துக்குப்பின் வாழ்ந்தவரென்றும் குறிப்பிடுவர்.

நூல் குறிப்பு : திருக்குறளின் சிறப்பினை உணர்த்த என்னும் தனிநூல் ஒன்று இயற்றப்பட்டது. இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. இதனை ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். நம் பாடப்பகுதி திருவள்ளுவமாலையில் உள்ள மூன்றாவது பாடலாகும். இப்பாடல் அறிவியல் அணுகுமுறையைச் சார்ந்தது.
உவமை : சிறுபுல்லின் தலையில் தினையளவினும் சிறுபனிநீர் நெடிதுயர்ந்த பனைமரத்தின் உருவத்தைத் தன்னுள் தெளிவாகக் காட்டும்.

உவமிக்கப்படும் பொருள் : வள்ளுவரின் குறள்வெண்பாக்கள், அரும்பெரும் கருத்துகளைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும்.

அறிவியல் கருத்து : ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி செய்யலாம் என்று கண்டவர் கலீலியோ கலிலி.

"நெடுந்தொலைவிலுள்ள பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புல் நுனியில் தேங்கிய சிறுபனித்துளி மிகத்தெளிவாகக் காட்டும்" என்ற கபிலரின் சிந்தனை, அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை வெளிப்படுத்துகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்