சிவில் சர்வீசஸ் தேர்வு - மெய்ப்படும் பெருங்கனவு! - பாகம் 1

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் என்பது இந்தியாவில் மதிக்கப்படும் தேர்வுகளில் ஒன்று. இதை இந்தியாவில், ஏன் உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்று என்று பெருமையுடன் மார்தட்டிச் சொல்வர்!
என்னைக் கேட்டால் அது பிற தேர்வுகளைப்போல மற்றொரு தேர்வு என்றுதான் சொல்வேன். மற்ற தேர்வுகளுக்கு அதன் அதன் நிலையில் என்ன கடினத்தன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு சிவில்சர்வீசஸ் தேர்வுக்கும் கடினத்தன்மை உண்டு. ஆனால், உலகின் கடிமான தேர்வு என்று மிகைப்படுத்துதல் எல்லாம் நம் முதுகை நாமே தட்டிக்கொள்வது மாதிரிதான். யாருக்குத் தெரியும் யூகோஸ்லோவேக்கியாவின் சிவில்சர்வீசஸ் தேர்வைப் பற்றி.! அவர்கள்கூட தங்களின் தேர்வை உலகின்கடினமான தேர்வு என்று சொல்லி வரலாம்! நிற்க!

பெருங்கனவு!
சிவில் சர்வீசஸ் தேர்வினைத் தமிழில் எழுதி தேர்வானைதை பெரிய சாதனைபோல் சிலர் பாராட்டினர். தமிழ் மொழியில் ஒரு தேர்வினை எழுதுவது ஒரு சாதனையா? சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது ஒரு பரீட்சை மட்டுமே! அதை எழுதுவதுவதற்கு மொழி ஒரு கருவி. அது தாய்மொழியாக இருந்தால் எளிதில் பயன்படுத்தலாம்.அதையே ஒரு சாதனையாக்கி கெண்டாடுவது எவ்விதத்தில் சரியாகும். தமிழின் தொன்மையான இலக்கியங்களில் சொல்லப்படாத கருத்துக்களையா இந்த சிவில் சர்வீசஸ் தேர்வு மாணவர்கள் கண்டறிந்து தமிழ்கூறு நல்லுலகை பெருமைப்படுத்திவிடமுடியும்? இருப்பினும் தமிழ்வழி மாணவர்களுக்கு இத்தேர்வு ஒரு மெய்ப்படாத பெருங்கனவாகத் தோன்றுகிறது. அதில் சில உண்மைகளும் உள்ளது என்பதை ஒத்துக்கெள்ளத்தான் வேண்டும். இவ்வாறு தேர்வை தமிழ்வழியில் எழுதமுனையும் மாணவர்கள் பலர் என்னைத் தொடர்புகொண்டு தேர்வுத் தயாரிப்பு உத்திகளைச் சொல்லுமாறு கேட்டுவருகின்றனர். அவர்களுக்காக இந்த நீண்ட பதிவினை எழுதுகிறேன். சிவில்சர்வீசஸ் குறித்து அறியவிரும்பும் பிறமாணவர்களுக்கும் இது பயன்படலாம். கைகூடாப் பெருங்கனவை மெய்ப்பிக்க இந்தப்பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

அடிப்படைத் தகவல்கள்:
இது சிவில் சர்வீசஸ்தேர்வுகள் குறித்த தொடர் பதிவுகளில் முதல்பகுதி. அனைவருக்கும் பொதுவான பொது அறிவுப் பாடங்கள்கள் குறித்து இதில் காணலாம்.

சிவில் சர்வீசஸ்தேர்வில் மூன்று கட்டங்கள் உண்டு.

1. முதல் நிலைத்தேர்வு ( Preliminary Examination)
2. முதன்மைத் தேர்வு ( Main Examination)
3. நேர்முகத்தேர்வு ( Interview)
தேர்வுத்திட்டத்தை ஒவ்வொன்றாகக் காணலாம்.

முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination)
முதல்நிலைத்தேர்வு என்பது தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நபர்களில் சிலரை மட்டும் வடிகட்டி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கும் ஸ்கீரினிங் டெஸ்ட் (Screening test). இதில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் இறுதி மதிப்பெண்களில் சேர்க்கப்படாது. இருப்பினும் இதில் ஒரு குறிப்பிட் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால்தான் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே இது முக்கியமான தேர்வு.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் ஐந்து இலட்சம் மாணவர்களில் சுமார் 15,000 மாணவர்கள் முதன்மைத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எஞ்சியவர்கள் முதல்நிலைத் தேர்வுக்கட்டத்தில் வடிகட்டப்படுவர். எனவே, முதல்நிலைத்தேர்வை எளிதாக எடுத்துக் கொள்ள இயலாது.

கானல்நீரான மொழிச்சமநிலை!
தமிழ்வழிமாணவர்களுக்குச் சோதனையான கட்டமாக இந்த முதல்நிலைத்தேர்வு அமைந்துள்ளது என்தை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். ஏனெனில், சிவில்சர்வீசஸ் உள்ளிட்ட யூபிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளின் வினாத்தாள்களும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருக்கும். தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வினை ஒரு அந்நிய மொழியில் படித்து எழுதவேண்டியுள்ளது. இந்தியில் படிக்கும் மாணவர்களால் தன்தாய் மொழியில் வினாக்களை எளிதில் புரிந்துகொள்ள இயலும். அவர்களுடன் தமிழ் உள்ளிட்ட பிறமொழி மாணவர்கள், அந்நிய மொழி ஒன்றில் படித்து, அதைத் தாய்மொழியில் உள்வாங்கி விடைகளைச் சிந்தித்து, ஆங்கிலத்தில் விடைகளைத் தேடி, சரியான விடையைக் கண்டறிந்து குறிக்கவேண்டும். இவ்விதமான எந்த சிக்கலும் இன்றி எளிதில் இந்தி மாணவர்களும், ஆங்கில வழிமாணவர்களும் தேர்வினை எதிர்கொள்கின்றனர். இப்போட்டி ஒருவருக்கு தொடர் ஓட்டமாகவும் ஒருவருக்கு தடைதாண்டும் ஓட்டமாகவும் அமைந்துள்ளது. இது எவ்வாறு சமமான போட்டி என்று தெரியவில்லை. மொழிச்சமநிலையை நிலைநாட்ட வினாத்தாள்களை தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வழங்கவேண்டும்என்ற நீண்டநாள் கோரிக்கை உரியவர்களால் ஏற்கப்படவே இல்லை. தமிழ் வழியில் படித்து கலெக்டர் ஆகக் கனவுகாணும் போது அந்தக் கனவினை முளையில் கிள்ளும் வேலையினை இந்த மொழிச்சமநிலை இல்லா வினாத்தாள் செய்துவிடுகிறது.

தமிழ்நாட்டில் குரூப் 1 தேர்வுக்காக விண்ணப்பிப்பவர்கள் சுமார் மூன்று இலட்சம்பேர். பணிக்காலியிடங்கள் இரட்டை இலக்கங்களில் மிகச்சொற்பமாக இருக்கும். ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் உள்ள சிவில்சர்வீசஸ் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் வெறும் பத்தாயிரம்பேர்! விண்ணப்பித்தபிறகு அந்தத்தேர்வினை எழுதுபவர்கள் அதைவிடக்குறைவு. ஏன் இந்த நிலை?

குரூப் 1 தேர்வுக்குத் தகுதியான அனைத்து நபர்களும் சிவில்சர்வீசஸ் தேர்வினை எழுதலாம். ஆனால் அவர்கள் எழுதுவதில்லை. யாருக்கும் உயர்பதவி அடைய விருப்பம் இல்லையா? அதற்கான திறமை இல்லையா? காரணம் தேர்வுமுறை தாய்மொழிக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்பதே! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் குரூப் 1 குரூப் 2 தேர்வினை எழுதும் மாணவர்கள் யாரும் சிவில்சர்வீசஸ் தேர்வுமாணவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பது என்னுடைய கருத்து. தமிழ் மொழியில் வினாத்தாள் அமைந்தால் அவர்கள் இந்திய அளவில் கடும்போட்டியாளர்களாக விளங்குவார்கள். தற்பொழுது இந்திய அளவில் சுமார் 10% சிவில் சர்வீசஸ் பணியிடங்களைப் பெறும் தமிழ்நாட்டு மாணவர்கள், சமமான போட்டி கிடைத்தால் இன்னும் இரண்டுமடங்கு அதிகமான பணிகளைப் பெறுவர் என்பது எனது கணிப்பு.

நாடு முழுவதிலும் உள்ளஇலட்சக்கணக்கான திறமையான தாய்மொழி வழிக்கல்வி பயின்ற மாணவர்கள் பங்கேற்காத, இல்லை பங்கேற்கவிடாத தேர்வு ஒன்றினை உலகின் கடினமானதேர்வு சூரியக்குடும்பத்தின் உன்னதமான தேர்வு என்றெல்லாம் சொல்வது சுத்த அபத்தம்.! ஆனாலும், இந்தச் சமமற்ற தேர்வுமுறையினை எதிர்கொண்டுதான் தமிழ் மாணவர்கள் வெல்கின்றனர். அது எவ்வாறு எனக்காண்போம்.

தமிழ்வழி மாணவர்கள் எப்படி தேர்வினை எதிர்கொள்கின்றனர்?

தமிழ்வழி சிவில் சர்வீசஸ் தேர்வு மாணவர்கள் தாங்கள் தமிழில் படிப்பதை ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் படிப்பதை தமிழிலும் மொழிமாற்றிக் கொள்ளும் திறனைப் பெற்றிருக்கவேண்டும். இது ஒன்றும் கைக்கொள்ளமுடியாத திறன் அல்ல. சற்று மொழியறிவும் பயிற்சியும் இருந்தால் இயல்பான பழக்கத்துக்கு கொண்டுவந்துவிடலாம். ஆனால் இதைச் செய்ய அடிப்படையான ஆங்கில அறிவு தேவை. அதை நம் பள்ளிக்கல்வி நிலையிலேயே பெற்றுவிடலாம். அவ்வாறு பள்ளியில் பெறவில்லையானாலும் சிலமாதங்கள் முயன்றால் இத்திறமையை அடைந்துவிடலாம். முதல்நிலைத்தேர்வின் வினாக்கள் ஆங்கிலத்தில் அமைந்திருப்பதால் முதல்நிலைத் தேர்வுக்கு ஆங்கில நூல்களை கட்டாயம் படித்திருக்கவேண்டும். பாடங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள தமிழ்நூல்களைக் கற்கலாம். ஆனால் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழ் நூல்கள் மட்டும்போதாது. ஆங்கிலநூல்கள் அவசியம்தேவை. எனவே, இனி சொல்லப்போகும் நூற்பட்டியலில் ஆங்கிலநூல்களும் தமிழ்நூல்களும் கலந்துவரும். அதைக் கவனத்தில் கொள்க.

முதல்நிலைத்தேர்வுக்கான நூற்பட்டியல்:
1) பொதுஅறிவுத்தாள் (General Studies paper -1)
இந்த முதல்நிலைத்தேர்வு கொள்குறிவகைத் தேர்வு. (Objective type questions). முதல் தாளான பொதுஅறிவுத்தாளில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முதல்நிலைத்தேர்வைத் தாண்டி முதன்மைத்தேர்வில் நுழைய உதவி புரியும். மேலும் இந்தத் தேர்வில் தவறாக குறிக்கப்படும் ஒவ்வொரு வினாவுக்கும் 0.33% எதிர் மதிப்பெண் -நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. எனவே கண்மூடித்தனமாக தேர்வினை எழுத இயலாது. இந்தத் தாளின் ஒவ்வொரு பாடப்பகுதிக்கும் படிக்கவேண்டிய நூல்களைக் காணலாம்.

A.Indian History:

1. Modern India, Bipan Chandra (old NCERT)
2. A brief history of Modern India, Spectrum publications.
3. Ancient india, RS Sharma ( old NCERT)
4. Medieval India, Satish Chandra ( old NCERT)
5. CCRT website ( for indian culture) http://ccrtindia.gov.in
6. Contemporary India, G.Venkatesan

 தமிழ்நூல்கள்:
1.  விடுதலைப் போராட்ட வரலாறு, க.வெங்கடேசன்.
2. நவீன இந்தியா, பிபன் சந்திரா (தமிழ் மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
3.  சமகால இந்திய வரலாறு, க.வெங்கடேசன்.
4.  பண்டைக்கால இந்திய வரலாறு, ஆர்எஸ். சர்மா (தமிழ் மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் )
5.  வந்தார்கள் வென்றார்கள், மதன், விகடன் பப்ளிகேஷன்ஸ்.
6. +1,+2 தமிழ்நாடு பாடநூல்.

B. Indian polity:

1. Indian polity , Lakshmikanth
2. Introduction to indian constitution, DD Basu.

 தமிழ்நூல்கள்:

1.அரசியலமைப்புச் சட்டம், ப.அர.ஜெயராஜன்
2.இந்திய அரசியலமைப்பு, பேராசிரியர். சந்திரசேகரன்
3.நமதுஅரசியலமைப்பு, சுபாஷ்காஷ்யப் (NBT,தமிழ் மொழிபெயர்ப்பு).
C.Geography and Environmental science.
1. NCERT books from 9th to 12th
2. Certificate physical geography, Oxford university press, Goh Cheng leong
3. Environmental studies, NIOS Study material. Free download:http://mrunal.org/download
4. Enivironment, Shankar IAS Academy publication.
5. School Atlas, Oxford or Orient black swan, or ttk.

தமிழ்நூல்கள்:
1.தமிழ்நாடு பாடநூல் நிறுவன நூல்கள் , சமூக அறிவியல் - புவியியல் 8 ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை.
2. இலங்கைத் தமிழ் புவியியல் பாடநூல்கள்.
மின்நூலகம்: http://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:புவியியல்

D. Indian Economy.
1. Indian Economy Key concepts, Sankar Ganesh Karuppaiah.
2. Prathiyogita Darpan.

தமிழ்நூல்கள்:
1.இந்தியப் பொருளாதாரம் முக்கிய கருத்துக்கள், சங்கர் கணேஷ் கருப்பையா.
2. நாட்டுக்கணக்கு, சோம.வள்ளியப்பன்

E. Science and technology.
1. Tata MC Graw hill General studies manual, general science part.
2. 9,10th Science NCERT
3. +1,+2 Bio- Zoology.
4. The hindu

தமிழ்நூல்கள்:
1. 9, 10th அறிவியல் பாட நூல்கள்
2. +1, +2 உயிரியியல் - விலங்கியல் பாடநூல்.
3. தமிழ் இந்து நாளிதழ்.
4. இணையதள மூலங்கள்.

F: Current affairs
1. The hindu.
2. Insights on india website: http://www.insightsonindia.com
3. Mrunal.org website: http://mrunal.org
4. Gk today website: http://www.gktoday.in
5. Press information Bureau website: www.pib.nic.in

தமிழ்:
1.தமிழ் இந்து நாளிதழ்.
2.தினமணி நாளிதழ்.

G. General knowledge
1. India year book, publication division.
2.  Manorama year book

தமிழ் நூல்
1.மனோரமா இயர்புக்

H. General studies Question bank.

1. 21 Years CSAT General Studies IAS Prelims Topic-wise Solved Papers (1995-2015), Disha publishers. 
2. Tata MC Graw hill (any edition - to practice objective type questions)

இவ்வளவு நூல்களா என்று யாரும் மலைத்துவிடவேண்டாம்.! ஒரே பகுதிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களைச் சொல்லியுள்ளேன். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினைப்பொருத்து ஒவ்வொரு பகுதிக்கும் குறைந்தது ஒரு நூலாவது படிக்கவேண்டும். ஒவ்வொரு நூலிலும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அதைப் படிக்க படிக்கத்தான் உணரமுடியும். நான் அந்த அந்த நூல்களின் தேர்வு பயன்பாட்டினைப் பொருத்து 1,2,3 என வரிசைப்படுத்தியிருக்கிறேன். பாடத்திட்டப்படி ஒருபகுதிக்கு ஒருநூலை முதலில் படியுங்கள். நேரம் இருப்பதைப் பொருத்து அடுத்த நூலைப் படிக்கலாம்.

படிக்கத்துவங்கும் முன் முதலில் பழைய வினாத்தாள்களைப் பகுத்துப் பார்க்கவேண்டும். வினாக்களின் தன்மை, ஒவ்வொரு பாடப் பகுதியிலிருந்தும் எவ்வளவு வினாக்கள் தேர்வுக்கு கேட்கப்பட்டுள்ளன? ஒவ்வொரு பகுதியும் பாடத்திட்டத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பழைய வினாக்களைப் பகுத்து ஆராயும்போது தெரியும். இதற்கு 21 Years CSAT General Studies IAS Prelims Topic-wise Solved Papers (1995-2015) என்ற நூல் நன்கு பயன்படும். இதுபோன்ற பகுப்பாய்வை மிருனால் பட்டேல் தனது இணையதளத்தில் செய்துள்ளார் அதைக் காண்க: http://mrunal.org/upsc#csatp1 .

திறனறித் தேர்வு (CSAT- Paper-2)
திறனறித்தேர்வு எனப்படும் இத்தாளில் கணக்கு, லாஜிகல் ரீசனிங், மற்றும் ஆங்கில காம்ப்ரிஹென்சன் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இதில் கேட்கப்படும் 80 வினாக்களில் 35% - அதாவது 28 வினாக்களைச் சரியாக விடையளித்து தகுதி பெறவேண்டும். இது தகுதித்தேர்வாக (Qualifying test ) மாற்றப்பட்டுள்ளது. எனவே இதில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் முதல்நிலைத்தேர்வின் கட்ஆஃப் மதிப்பெண்களில் சேர்க்கப்படாது. தாள் 1 பொதுஅறிவுத்தாளில் பெறும் மதிப்பெண்மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இந்தத் தாளுக்கான பாடநூல்கள் வருமாறு.

A. Arithmatic and mental ability
1. Quantitative aptitude, RS Agarwal.
2. Fast track Arithmetic, Rajesh Verma.
3. Statistics, Spectrum solved questions.
B. Reasoning
1. Analytical reasoning , M.K.Pande.
How to use this book? : pls read this article by Mrunal patel here: http://mrunal.org/…/studyplan-csat-aptitude-paper-2-compreh…

2. Verbal non verbal Logical reasoning, RS.Agarwal. This book is useful for Non verbal questions and comprehension.

C. Comprehension

1. The Hindu news paper columns.

இரண்டாம்தாள் பெரும்பாலும் கணக்கு சார்ந்தும் ஆங்கில மொழிசார்ந்தும் இருப்பதால் தமிழ்நூல்கள் எதையும் பரிந்துரைக்கவில்லை.

முதன்மைத்தேர்வு (Main Examination)

சிவில் சர்வீசஸ் தேர்வின் மிகமுக்கியமான கட்டம் முதன்மைத்தேர்வு. இதில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் இறுதி வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கும். இந்தத் தேர்வு எழுத்துத்தேர்வு ( descriptive type questions).
இந்த முதன்மைத் தேர்வில் தமிழ்வழி மாணவர்கள் நிச்சயம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பிறமாணவர்களை பின்னுக்குத் தள்ளிவிடலாம்! எப்படி?
இக்கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க

கருத்துரையிடுக

0 கருத்துகள்