யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்திலிருந்து 35 பேர் மட்டுமே தேர்வு


ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்விற்கு 10.65 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதிலிருந்து 5 லட்சம் பேர் முதல்நிலை தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்விற்கு (மெயின்ஸ்) 10,468 பேர் தேர்வாகினர். பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நேர்காணல் தேர்விற்கு 1994 பேர் களந்துகொண்டனர்.


இந்நிலையில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் அனைத்து கட்டங்களும் முடிவடைந்து இறுதி முடிவு வெளியாகியுள்ளது. இந்தப் இறுதி பட்டியலில் 759 பேர் தேர்வாகினர். அகில இந்திய அளவில் முதல் இடத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கனிஷாக் கடாரியா பிடித்துள்ளார்.

இதேபோல அகில இந்திய அளவில் 5 ஆம் இடம் பிடித்த சுருஸ்தி ஜெயன்ந்த் தேஷ்முக் இந்தாண்டு தேர்வான பெண்களில் முதலிடத்தில் உள்ளார். முதல் 25 இடங்களை பிடித்தவர்களில் 15 பேர் ஆண்கள் மற்றும் 10 பேர் பெண்கள். தமிழ்நாடு அளவில் சி.ஏ.ரிஷப் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து ரென்ஜினா மேரி மற்றும் வி.அபிஷேக் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். 

ஆனால் தமிழகத்திலிருந்து இம்முறை வெறும் 35 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 10 ஆண்டுகளில் தேர்வானவர்களின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவு. தமிழ்நாட்டிலிருந்து தேர்வானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதுவொரு மோசமான செயல்பாடு என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு 990 காலியிடங்கள் இருந்தன. அதற்கு தமிழகத்தில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்