கடையெழு வள்ளல்களும் - ஆண்ட நாடுகளும்


பேகன்
பேகனின் ஊரான ஆவினன்குடி 'பொதினி' என்றழைக்கப்பட்டு, தற்போது பழனி எனப்படுகிறது. பழனி மலையும் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளும் பேகனது நாடாகும். 
பாரி
பாரியின் நாடு பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. 

காரி
காரியின் நாடு (மலையமான் திருமுடிக்காரி) மலையமான் நாடு என்பதாகும். இது மருவி 'மலாடு' எனப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும். 

ஆய்
ஆய் நாடு (ஆய் அண்டிரன்) - பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும். 
அதியமான்
அதியமான் நாடு (அதிகமான் நெடுமான் அஞ்சி) 'தகடூர்' என்றழைக்கப்பட்ட தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி. இப்பகுதியில் உள்ள 'பூரிக்கல்' மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியையே ஔவையாருக்கு அதிகமான் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

நள்ளி
நள்ளியின் நாடு (நளிமலை நாடன்) நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி. தற்போது உதகமண்டலம் 'ஊட்டி என்று கூறப்படுகிறது. 
ஓரி
ஓரியின் நாடு (வல்வில் ஓரி) - நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 'கொல்லி மலையும்' அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும். 

ஓய்மா நாட்டு நல்லியக்கோடனது நாடு திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்