REAL INSPIRATION & REAL ROLE MODEL. Mr. NANDHAKUMAR, IRS

சரியாக எழுத வராது என்று பள்ளியால் நிராகரிக்கப்பட்ட நந்தகுமார் எழுதி கொடுத்ததைத்தான் பிரதமரும், ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில் பேசினார்கள்.
நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் பிரதிநிதி நந்தகுமார் ஐஆர்எஸ்
-எல்.முருகராஜ்

 டிஸ்லெக்ஸியா
இது குழந்தைப்பருவத்தினருக்கு ஏற்படக்கூடிய குறைபாடுபள்ளிக்கூடம் போகும்போதுதான் இதன் பிரச்னை தெரியவரும்.
'இந்தக் குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களை வாசிக்கவும், அவற்றிற்குரிய உச்சரிப்புகளை சம்பந்தப்படுத்திப் பார்க்கவும் சிரமப்படுவார்கள்.ஆனால் இது ஒரு மனநோய் இல்லை.

தமது சக வகுப்பு மாணவர்களைப் போல, எழுத, படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.இதனால் மக்கு பையன் என்றும் சோம்பேறி என்றும் நிராகரிக்கப்படுவர்.
 
எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றை படிப்பதிலும் பகுத்துப் பார்ப்பதிலும் பல குழப்பங்கள் இருக்கும். முழுமையான வாக்கியங்கள் அமைத்து பேச மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்களின் குறைகளை சரியாகக் கண்டறிந்து, சரியான முறையில் கற்றுவித்தால் சமுதாயத்தில் சிறப்பானதொரு இடத்தைப் பிடிப்பார்கள்.
 
ஆனால், இவர்களை கண்டறிந்து சரியான முறையில் கற்றுத்தர யாருக்கும் பொறுமையும் இல்லை நேரமும் இல்லை.
ஆனாலும் தன்னைத் தானே தீட்டிக்கொண்டு தனக்குள்ளான சக்தியை மீட்டுக்கொண்டு தனக்கான டிஸ்லெக்ஸியா குறைபாடை வென்று இன்று திருச்சி வருமானவரித் துறையின் இணை ஆணையராக இருப்பவர்தான் நந்தகுமார் ஐஆர்எஸ்.

ஒலைக்குடிசையில் வாழ்ந்த ஏழைக்குடும்பம் அவருடையது.  அரசுப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து முடிப்பதற்குள்ளாகவே அவர் பலமுறை மனதால் காயப்படுத்தப்பட்டார். மக்கு பையன் என்றும் சோம்பேறி என்றும் கடைசி பெஞ்சிற்கு தள்ளப்பட்டார் அதைக்கூட தாங்கிக்கொள்ள முடிந்த இவரால் தாங்கிக்கொள்ள முடியாதது 'இவனோடு சேர்ந்தால் உருப்படமாட்டீங்க' என்று சொல்லி சகமாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தியதான்.
இந்தக் கொடுமையை தாங்கிக்கொண்டு ஆறாம் வகுப்பிற்கு போகவும் இல்லை, பள்ளியில் அழைக்கவும் இல்லை.
 
அதன்பிறகு லாட்டரி சீட்டு விற்கும் பையனாக, ஜெராக்ஸ் கடை பையனாக, மோட்டார் பைக் கடையில் டீ வாங்கித்தரும் பையனாக என்று சமூகத்தின் அடித்தளத்தில் உழல்பவனாக அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு உழைப்பவனாக வளர்ந்தார்.
 
மூன்று வருடம் கழித்து, எனக்கு ஏன் இந்த நிலை? எனக்குள் என்ன பிரச்னை? இதை போக்கமுடியாதா? என்று யோசித்தபோது எந்த கல்வி தன்னை நிராகரித்ததோ அந்த கல்வியாலேயே சாதித்து காட்டுவது என்று முடிவு செய்தார்.
 
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு எழுதினார், தேர்வானார். நம்பிக்கையுடன் அடுத்து பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார் அதிலும் தேறினார். பிளஸ் ஒன் படிக்க பள்ளிக்கு சென்றார். பள்ளி மறுபடியும் நந்தகுமாரை பழைய டிஸ்லெக்ஸியா குறைபாடுடையவராகத்தான் பார்த்து அனுமதிக்க மறுத்தது, மீண்டும் தனித்தேர்வு எழுதினார், தேர்ச்சி பெற்றார்.
 
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்காக யாரிடமும் போய் படிக்கவில்லை சந்தேகம் கூட கேட்டதில்லை.சம்பந்தபட்ட பாடபுத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு அதையே திரும்ப திரும்ப படித்தார் படித்ததை திரும்ப திரும்ப எழுதி பார்த்தார், அது மட்டுமே அவர் செய்தது.
 
பிறகு கல்லுாரியில் இடம் தேடியபோது தனித்தேர்வு எழுதி தேர்வானவர்களை ஒரு புழு போல பார்த்து துரத்தியது. கடைசியில் ஒரு கல்லுாரியில் இளங்கலை ஆங்கிலம் பிரிவு கிடைத்து படித்தார்.
 
வழக்கமாக பள்ளியில் படித்து வந்த மாணவர்களை விட இவர் இளங்கலையில் முதல்தர மதிப்பெண் எடுக்கவே இந்த முறை முதுகலை ஆங்கில பிரிவில் விரும்பிய கல்லாரியில் கூப்பிட்டு அனுமதி கொடுத்தார்கள்.
 
நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் கொண்டவர் நந்தகுமார். இதன் காரணமாக முதுகலை முடித்த கையோடு சென்னை ராணுவ பயிற்சி கல்லுாரியில் சேர விருப்பம் கொண்டார் அனுமதியும் கிடைத்தது. அங்கு சேரப்போகும் போது ஏற்பட்ட விபத்தில் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது.
 
58 கிலோவில் இருந்து 32 கிலோவிற்கு குறைந்தார், சிகிச்சை கட்டணம் மூவாயிரம் ரூபாய் இல்லாத நிலையில் நந்தகுமாரின் தாய் தனது தாலியை விற்று பணத்தை கொண்டுவந்தார். பணத்தை பெற்ற மருத்துவர் 'இவன் பிழைப்பது கடினம் எதற்காக தாலியை விற்று சிரமப்படுகிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார்.தாலியை விட என் பையன் உயிர் முக்கியம் என்று அந்த தாய் பதில் தந்திருக்கிறார். அந்த தாலி தந்த தாயின் வைராக்கியத்தால் உடல் தேர்ந்து எழுந்தார்.  ஆனால் ராணுவக்கல்லுாரியில் சேரமுடியவில்லை.
 
அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபோது, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் போன்ற மத்திய அரசின் குடிமைப்பணியில் சேர்வது என முடிவுசெய்தார் அதுவும் இளங்கலை முதுகலை போல மூன்றாண்டு படிக்கவேண்டும் என்ற அறியாமை நிலையுடன் அதற்கான பயிற்சி மையங்களை அணுகினார்.
 
ஐஐடி, ஐஐஎம் படித்தவர்களே படாதபாடுபடும் போது பாவம் நீங்கள் என்ன செய்யமுடியும் என்று அந்த பயிற்சி மையம் அவரை நிராகரித்தது. அப்போதுதான் அவரது நண்பர் ஒருவர் இது போட்டித்தேர்வுதான் வழக்கம் போல நீயே படித்து முயற்சி செய் என்று சொல்லிவிட்டார்.
 
அதற்கான முயற்சியில் இறங்கி தேர்வு எழுதினார், அகில இந்திய அளவில் முதல் மாணவராக தேறினார். ஐஆர்எஸ் ஆனார். பயிற்சி மையம் சொன்ன ஐஐடி, ஐஐஎம் மாணவர்கள் எல்லாம் ரேங்கில் இவரைவிட வெகு தொலைவில் இருந்தனர்.
 
திருச்சி வருமானவரி துறையின் இணை இயக்குனராக வருவதற்கு முன் பார்த்த பல்வேறு பொறுப்பான பணிகளில் டில்லி பிரதமர் அலுவலக உதவியாளராக இருந்ததும் ஒன்று. சரியாக எழுத வராது என்று பள்ளியால் நிராகரிக்கப்பட்ட நந்தகுமார் எழுதி கொடுத்ததைத்தான் பிரதமரும், ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில் பேசினார்கள்.
 
டிஸ்லெக்சியாவை வென்று சாதனை படைத்திட்ட இவரது தன்னம்பிக்கையை பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இதற்காக இவருக்கு சென்னையில் உயிர் அறக்கட்டளை அமைப்பினர் பாராட்டுவிழா நடத்தினர்.
 
பாராட்டு விழாவில் கலந்து கொண்டு நந்தகுமார் பேசியதுதான் இன்னும் முக்கியம்...
 
யார் எதைக்கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்வது இல்லை அதே போலத்தான் பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கிய போது எதற்காக எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறீர்கள் என்று கேட்டேன் அபத்தமான கேள்வி யாருமே இப்படி கேட்டது இல்லை என்றனர், பிறகு நடந்த நீண்ட விவாதத்திற்கு பிறகு டாக்டர் பட்டத்தை ஏற்றுக்கொண்டாலும் இன்னும் நான் என் பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டம் போட்டுக்கொள்ளவில்லை.
 
என் உள்ளூணர்வு எப்போது சொல்கிறதோ, எப்போது நான் அந்த பட்டத்திற்கு தகுதியானவன் என்று உணர்கிறோனோ அன்று டாக்டர் பட்டம் போட்டுக்கொள்வேன். காரணம் நான் இதுவரை சாதித்தாக எதையும் சொல்லமுடியவில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்
நன்றாக படிக்கும் மாணவர்களை மேலும் மேலும் சிறப்பாக படிக்கவைத்து அவர்களை முன்னேற்ற காட்டும் துடிப்பில் நூறில் ஒரு பங்கையாவது சுமரான நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் மீதும் காட்டுங்கள். அவர்களுக்குள்ளும் ஏதோ ஒரு அறிவு புதைந்து கிடக்கும், அதைக்கண்டுபிடித்து தட்டி எழுப்புங்கள், அவனும் சாதனை மாணவனாக, மாணவியராக வருவர்.
 
நான் ஏதாவது சாதித்திருக்கிறேன் என்றால் ஒரு விஷயத்தை சொல்லலாம், கடந்த காலங்களில் லட்சத்திற்கு மேற்பட்ட நிராகரிக்கப்பட்ட மாணவர்களை அதாவது சமூகத்தின் பார்வையில் சுமாரான மாணவர்களாக கருதப்படுபவர்கள் மத்தியில் பேசி அவர்களை முன்னேற்ற, அவர்களை உயர்த்த, அவர்களது திறமையை அவர்களுக்கே உணர்த்த பேசிவருகிறேன், அதற்கான பலன் முழுமையாக கிடைக்கும் போது நான் டாக்டர் நந்தகுமாராக வலம்வருவேன், அதுவரை நான் நந்தகுமார் ஐஆர்எஸ் மட்டுமே என்றார்.
 
நந்தகுமார் மின்அஞ்சல் முகவரி : vnandhuifs@yahoo.co.in
நன்றி : தினமலர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்