Kasikandam | காசிக்காண்டம்

 
10th Tamil - காசிக்காண்டம்
TNPSC, TN Police, TNTET ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான 
முக்கிய தேர்வுக்குறிப்புகள்
காசிக்காண்டம்.
  • காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம். 
  • கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம்.
  • இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. 
  • சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. 
  • நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
    எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
    போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
    ஒழுக்கமும் வழிபடும் பண்பே
                      - காசிக்காண்டம்  (இல்லொழுக்கம், பா எண்: 17)

பாடலின் பொருள்
விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், 'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.

சொல்லும் பொருளும்
அருகுற - அருகில்
முகமன் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்

இலக்கணக்குறிப்பு
நன்மொழி - பண்புத்தொகை
வியத்தல் - தொழிற்பெயர்
நோக்கல் - தொழிற்பெயர்
எழுதல் - தொழிற்பெயர் 
உரைத்தல் - தொழிற்பெயர்
செப்பல் - தொழிற்பெயர்
இருத்தல் - தொழிற்பெயர்
வழங்கல் - தொழிற்பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்
உரைத்த - உரை + த் + த் + அ
உரை - பகுதி
த் - சந்தி
த் - இறந்த காலஇடைநிலை
அ - பெயரெச்ச விகுதி

வருக - வா(வரு) + க
வா - பகுதி
வரு எனத் திரிந்தது விகாரம்
க - வியங்கோள் வினைமுற்று விகுதி
"ஒப்புடன் முகம் மலர்ந்தே
    உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும்
    உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம்
    முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியி னோடு
    கடும்பசி ஆகும் தானே'
                         - விவேகசிந்தாமணி. (4)

கருத்துரையிடுக

0 கருத்துகள்