பொருள்கோள் (பகுதி-2) - தமிழ் இலக்கணம்

 TET, TNPSC பொதுத்தமிழ் இலக்கணம்

பொருள்கோள்    பகுதி-2

ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறையைப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) என வழங்குவர். பொருள்கோள் எண் (8) வகைப்படும்.
5. தாப்பிசைப்பொருள்கோள்         
6. அளைமறிபாப்புப்பொருள்கோள்
7. கொண்டுகூட்டுப்பொருள்கோள்
8. அடிமறிமாற்றுப்பொருள்கோள்

5. தாப்பிசைப் பொருள்கோள்
    ஊஞ்சலின் நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவதுபோலச் செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது தாப்பிசைப் பொருள்கோள்.
தாம்பு + இசை = தாப்பிசை - ஊஞ்சல் கயிறு அசைதல்போல. (தாம்பு = ஊஞ்சல்கயிறு)
(எ.கா.)
        இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
        துறந்தார் துறந்தார் துணை. - குறள், 310
இப்பாடலில் ‘சினத்தை’ என்னும் நடுநின்ற சொல்லைச், சினத்தை உடையவர் (இறந்தார்) இறந்தார் அனையர் எனவும், சினத்தைத் துறந்தார் (துறந்தார்) ஞானியர் துணை எனவும் அமைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வதுபோலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது அளைமறிபாப்புப் பொருள்கோள். ( அளை - புற்று, பாப்பு - பாம்பு. )
(எ.கா.)
தாடிநந்த உணர்வினராய்த் தாளுடைந்து
    தண்டூன்றித் தளர்வார் தாமும்
சூடிநந்த வினையாக்கை சுடவிளிந்து
    நாற்கதியிற் சுழல்வார் தாமும்
மூடிநந்த பிணிநலிய முன்செய்த
    வினையென்றே முனிவார் தாமும்
வாடிநந்த பொழுதினே வானெய்து
    நெறிமுன்னி முயலா தாரே.
இப்பாடலில் ‘வாடிநந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலாதாரே’ என்னும் ஈற்றடியைப் பாடலின் முதலில்கொண்டு பொருள் கொள்ளுதல் வேண்டும். 

7. கொண்டுகூட்டுப் பொருள்கோள் 
செய்யுளின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப்பொருள்கோள்.

(எ.கா.) 
        கட்டிக் கரும்பு கசக்கும் மிகக்கனிந்த 
        எட்டிக் கனியினிக்கும் என்னூரில் - பட்டியுள 
        காளை படிபால் கறக்குமே நல்லபசு
        வேளை தவிரா துழும். 
இப்பாடலை அப்படியே படித்தால் பொருள் விளங்காது. இதில் உள்ள சொற்களைக் கட்டிக் கரும்பு இனிக்கும்; மிகக்கனிந்த எட்டிக்கனி கசக்கும்; பட்டியிலிருக்கும் காளை மாடு நேரந்தவிராது உழும். நல்ல பசு படி பால் கறக்கும் எனப் பொருள் கொள்வதற்கு ஏற்ப அடிதோறும் மாறிக்கிடக்கின்ற சொற்களைப் பொருத்தமாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். 

குறிப்பு : மொழிமாற்றுப் பொருள்கோள் என்பது அந்தந்த அடிகளில் உள்ள சொற்களை முன்பின்னாக மாற்றிக்கொள்வது. கொண்டுகூட்டுப் பொருள்கோள் என்பது பல அடிகளிலும் உள்ள சொற்களை மாற்றிப் பொருள்கொள்வது.

8. அடிமறிமாற்றுப் பொருள்கோள் 
செய்யுளின் எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறிமாற்றுப் பொருள்கோள்.!
(எ.கா.) 
        மாறாக் காதலர் மலைமறந் தனரே 
        ஆறாக் கட்பனி வரலா னாவே 
        வேறா மென்தோள் வளைநெகிழும்மே
        கூறாய் தோழி யான்வாழு மாறே. 
இப்பாடலில் உள்ள அடிகளை முன்பின்னாக எப்படி மாற்றிப் பொருள்கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாது.

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download 


கருத்துரையிடுக

1 கருத்துகள்