நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து
-பெருவாயின் முள்ளியார்
சொல்லும் பொருளும்
- நன்றியறிதல்- பிறர் செய்த உதவியை மறவாமை
- ஒப்புரவு - எல்லோரையும் சமமாகப் பேணுதல்
- நட்டல்- நட்புக் கொள்ளுதல்
பாடலின் பொருள்
பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்;
பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்;
இனிய சொற்களைப் பேசுதல்;
எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்;
கல்வி அறிவு பெறுதல்;
எல்லோரையும் சமமாகப் பேணுதல் ;
அறிவுடையவராய் இருத்தல்;
நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்
ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.
ஆசாரக்கோவை பற்றிய குறிப்பு
- பெருவாயின் முள்ளியார் ஆசிரியர் குறிப்பு
- ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
- இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
- ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று .
- இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.
பகுதி – (ஆ) இலக்கியம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறரிடம் நான்.......... பேசுவேன்.
அ) கடுஞ்சொல்
ஆ) இன்சொல்
இ) வன்சொல்
ஈ) கொடுஞ்சொல்
2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது........ ஆகும்.
அ) வம்பு
ஆ) அமைதி
இ) அடக்கம்
ஈ) பொறை
3. அறிவு+உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .
அ) அறிவுடைமை
ஆ) அறிவு உடைமை
இ) அறியுடைமை
ஈ) அறிஉடைமை
4. இவை+எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்
அ) இவை எட்டும்
ஆ) இவையெட்டும்
இ) இவ்வெட்டும்
ஈ) இவ்எட்டும்
5.நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நன்றி+யறிதல்
ஆ) நன்றி+அறிதல்
இ) நன்று+அறிதல்
ஈ) நன்று+யறிதல்
6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -
ஆ) பொறை+யுடைமை
அ) பொறுமை+உடைமை
இ) பொறு+யுடைமை
ஈ) பொறை + உடைமை
0 கருத்துகள்